நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ஆற்றல் தேவைப்படும் நேரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், முந்திரி பருப்பு, கடலைப் பருப்பு, திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும். மூளையின் செயல்திறனை அதிகரிக்க சத்து நிறைந்த கேரட், வெள்ளரிக்காய், ஊட்டி குட மிளகாய் (கேப்சியம்) போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவசியம். கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறைக்கு செல்வதற்கு சில மணி நேரம் முன்பாக போதுமான அளவு தண்ணீர் குடித்து விட வேண்டும். பிறகு இடைவெளி விட்டு விடுங்கள். தேர்வு நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையை இது உருவாக்காது. காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம். தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை, கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே. குறைந்த அளவு இனிப்புச்சுவை கொண்ட மாவுப்பொருட்கள் மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த பச்சைப்பயறு கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும். தேர்வு காலங்களில் மட்டுமல்ல இயல்பான மற்றநாட்களிலும் மாணவ-மாணவிகள் ஆரோக்கியமான உணவுகளை உண்பது சிறந்தது.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் நன்றாக படித்திருந்தாலும், சரியாக தேர்வு எழுதுவது கடினம். எனவே தேர்வு சமயங்களில் குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாகும். ஏனெனில் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு அதிகபடியான மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவு நாள் முழுவதும் படிக்க அவர்களுக்கு போதுமான ஆற்றலைக் தருகிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிடும் போது, ஆர்வத்துடன் பாடங்களை கற்றுக்கொள்ள முனைகிறார்கள். தேர்வு காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரம் உள்பட 24 மணி நேரமும் மூளை இயங்கிக் கொண்டே இருக்கும். மூளைக்கு தொடர்ச்சியான ஆற்றல் நீங்கள் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. எனவே தேர்வு நேரங்களில் மாணவ-மாணவிகள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.