பாரதிய ஜனதா ஆட்சியில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது சமூக நீதியை முன்னெடுத்து செல்வது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இதற்காக பா.ஜனதா அல்லாத மற்ற அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து காணொலி வாயிலாக (இணையவழி) விவாதிக்க உள்ளார். இதற்கான கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கள்) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இணைய வழி கூட்டத்தில் சென்னையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதில் டெல்லியில் இருந்தபடி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பாரதிய ராஷ்டிரிய சமீதி மூத்த தலைவர் கேசவராவ், ஆம்ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பா.ஜனதாவுக்கு எதிரான அணியில் இணையாத ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து சஸ்மித் பாத்ரா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து சுரேஷ் ஆகியோரும் இந்த காணொலி காட்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தியாவில் சமூக நீதியை முன்னெடுத்து செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தேசிய அளவிலான தலைவர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார். நாட்டில் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் ஓ.பி.சி. அசோசியேஷன் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். எனவே இதில் யார்-யார் பங்கேற்று பேசுவார்கள் என்பது நாளை இறுதி செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறுகையில், பா.ஜனதா ஆட்சியில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே சமூக நீதியை முன்னெடுத்து செல்வது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்குமாறு எங்கள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் அழைப்பு வந்துள்ளது என்று தெரிவித்தார்.