No results found

    கோவில் நில ஆக்கிரமிப்பை மீட்க, ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்- உயர்நீதிமன்றம் | Google Tamil News


    |சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் தீவிர சிவபக்தை. தொன்மையான ஆதீன மடங்களில் ஒன்றான தருமபுர ஆதீன மடத்தின் நிர்வாகத்தின் கீழ் திருச்சி உய்யக்கொண்டான் மலையில் உஜ்ஜீவநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வலதுபுறம் தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இது சம்பந்தமாக கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அந்த நிலம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படவில்லை. இப்படியே விட்டு விட்டால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டு காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே உஜ்ஜீவநாதர் கோவில் நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் இதுசம்பந்தமாக உரிய விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்காக அளவீடு செய்யும் பணி தாமதமாகி வருகிறது என்று தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், ஒரே அலுவலக வளாகத்தில் இருக்கும் அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் கோப்புகளை அடுத்தவரிடம் உரிய நேரத்தில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்க இயலாது என்று கூறினர். கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்க அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால், பணியிடை நீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Previous Next

    نموذج الاتصال