சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையும், மாநகராட்சியும் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படி இன்று ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள். 200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள். பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Google Tamil News | சென்னையில் இன்று 200 இடங்களில் முகாம் - மழைக்கால நோய்களுக்கு இலவச சிகிச்சை
Tamil News