தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 3 தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Google Tamil News | தமிழகத்தில் நவம்பர் 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் - பாலச்சந்திரன்
Tamil News