திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:- கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கன்கள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதி ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளன. அதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேலும் சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பதைத் தவிர்க்க வி.ஐ.பி. தரிசன நேரத்தை டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து காலை 8 மணியாக மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Google Tamil News | திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாளை மறு நாள் முதல் நேரம் ஒதுக்கீடு- தேவஸ்தானம் தகவல்
Tamil News