பலன்: மோக்ஷம் பெற்று தரும்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் - எழுதா மறையின்
ஒன்றே, அரும்பொருளே , அருளே , உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முக்தி ஆனந்தமே
பொருள்:
இமயத்தின் புதல்வியே, எழுதப்படாத (காதால் கேட்கப்பட்டு வழி வழியாய் வந்த) வேதமே, அதன் பொருளே, அருளே வடிவான உமையே, நான், நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும், நடந்தாலும், என்றும் நினைப்பது உன்னையே. வணங்குவதும் உன் மலர் பாதங்களையே. இதனால் எனக்கு கிடைக்கப்போவது முக்தி. அதுவே என்றும் அழியாத பரமானந்தம்.
அம்பாளை ஹிமகிரி தனயே, ஹிமகிரி புத்ரி, ஹிமாச்சல தனயே, ஹிமாத்ரி சுதே, என்றெல்லாம் பெரியோர்கள் கீர்த்தனம் செய்துள்ளார்கள்.
காதால் கேட்டு வழி வழியாய் வந்ததால், வேதத்திற்கு ஸ்ருதி என்று பெயர்.
இதே போல, சௌந்தர்ய லஹரி, 27-வது ஸ்லோகத்தில், ஸ்ரீ பகவத்பாதாள் கூறுகிறார்:
ஜபோ ஜல்ப சில்பம், சகலம் அபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமனம், அசன அத்யாஹுத்ய விதி:
ப்ரணாம சம்வேஷ:, சுகம் அகிலம் ஆத்மார்ப்பன த்ருஷா
ஸபர்யா பர்யா: தவ பவது யன்மே விலஸிதம்
அதாவது, நமது ஆத்மாவை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால், நமக்கு ஜீவன் முக்தி கிடைக்கும். அப்படி செய்வதால், நாம் பேசும் பேச்சு, அம்பாளை வர்ணிக்கும் ஸ்லோகங்களாக கருதப்படும். கைகளால் செய்யும் வேலைகள், அம்பாள் வழிபாட்டில் உள்ள 10 முத்ரைகளாகும். நாம் நடக்கும் நடை, அம்பாளை வலம் வருவதாக மாறும். நாம் உண்ணும் உணவு, அம்பாளை குறித்து யாகம் நடத்த உபயோகமாகும் ஆஹுதியாக போற்றப்படும். நாம் படுத்துக்கொள்வது, அம்பாளுக்கு செய்யும் நமஸ்காரமாக கருதப்படும். நாம் என்ன செயல் செய்தாலும், அது அம்பாள் வழிபாடாக மாறும். இவையே ஆத்மநிவேதனம் எனப்படும் 9 வகை பக்தி ஒன்றின் சிறப்பு.
பாடல் (ராகம் - உமாபரணம், தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க