தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் நீடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியது. கட்சியின் சூழல் குறித்து மூத்த தலைவர்கள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் சரத்பவார் கூறியிருக்கிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் தலைமையிலான இந்த கூட்டத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சரத்பவாரின் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சரத் பவார் பதவி விலகுவதை யாருமே விரும்பவில்லை என்பதால், அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. இன்றைய தீர்மானம், கட்சியில் சரத் பவாரின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.