இத்திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியுதவியாக 51.56 கோடி ரூபாய் மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியாக 20 கோடி ரூபாயில் பொது வசதி மையம், உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு போன்றவை அமைக்கப்பட உள்ளன. இப்பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 6,000 நபர்கள் நேரடியாகவும் 10,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். புதுயுக தொழில் முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த பிரிவுகளை சார்ந்த தொழில் முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்க கடந்த நிதி ஆண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் இந்த நிதியம் தொடங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில் 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் இருந்து தகுதியான நடுவர் குழுவின் வாயிலாக 2-ம் கட்டமாக 8 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேம்பட்ட உற்பத்தி துறையில் இயங்கும் குகன் இண்டஸ்ட்ரியல் மேனு பேக்சரிங் சொல்யூசன்ஸ், பொழுதுபோக்கு ஊடகத் துறையில் இயங்கும் ஷார்ட்பண்ட்லி, கட்டிடவியல் துறையில் இயங்கும் ஸ்பிரிண்ட்6, செயற்கை நுண்ணறிவு துறையில் இயங்கும் இண்டியா ஸ்பீக்ஸ், மருத்துவத் தொழில்நுட்பத்துறையில் இயங்கும் டெஸ்டிராட்டம் சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங்களும், பழங்குடியினரால் தொடங்கப்பட்டுள்ள தாளவாடி பசுமை எரிபொருள் தயாரிப்பு நிறுவனம், நம்சந்தை-கோத்தகிரி டிரைபல் பிரைவேட் லிமிடெட், சோழகர் டிரை பல் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களும் பங்கு முதலீட்டினை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த நிறுவனங்களுக்கு மொத்தம் 9.75 கோடி ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசானது தகுதியான நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஆதார நிதியாக "தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி டான்சீட்' திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. இதுவரை நடைபெற்ற பதிப்புகளில் 84 புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன. தற்போது டான்சீட் 4-வது பதிப்பில் இரண்டாம் கட்டமாக உற்பத்தி, நவீன கட்டிடவியல், இணைய பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்து இயங்கும் 25 நிறுவனங்கள் புத்தொழில் ஆதார நிதியினை பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.