8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார்.
காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது. கீழச்சித்திரை வீதியில் இருந்த புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின்னர் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள் ளது. நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.