கடன் தொல்லை அகல புதன் கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டும். குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீ வராஹியை வழிபட வேண்டும். இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன. பஞ்சமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் தேங்காய்ப் பூரணம், சர்க்கரைப் பொங்கல், கேசரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் நைவேத்தியம் செய்து வழிபடலாம். அன்னை வராஹிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.
கஷ்டம், கடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஒரு தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய்விட்டு, பஞ்சு திரி போட்டு, குங்குமம் இட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். பிரச்சினைகள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட பஞ்சமி திதி அன்று இவ்வாறு விளக்கேற்றி வழிபடலாம். வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹிதேவியை விரதம் இருந்து மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வராஹி தேவி!