மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய எஸ்.ஐ.யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) April 18, 2023
குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.
குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன். pic.twitter.com/p0hQYDxbgw