நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, தகட்டூர் பைரவர் கோவில் இருந்து ராதாகிருஷ்ண சாமியார் 3 கி.மீட்டர் ஊர்வலமாக வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை அடைந்தனர். பின்பு, கோவிலில் திருமேனி அம்மன் புறப்பாடு செய்யப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது சாமியார் வாழைப்பழங்களை வீசினார். இந்த வாழைப்பழத்தை பிடித்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் வாழைப்பழத்தை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர். தொடர்ந்து, கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு போட்டு, பொங்கல் வைத்து உருவச்சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். மேலும், மண் குதிரைகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்து குதிரை விடும் நிகழ்ச்சியும் இரவு தேரோட்டம், வாணவேடிக்கையும் நடந்தது.