கோர்ட்டுகளில் வக்கீல்கள் வாதாடும்போது அதிகமாக 3 முதல் 5 நிமிடங்களுக்குள் வாதாடி முடிக்க வேண்டும். இதில் ரத்தின சுருக்கமாகவும், தெளிவாகவும் நீதிமன்றத்தில் எடுத்து கூறினால் விரைவாக நீதியை பெற முடியும். நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆன்லைன் முறை, இ-பைலிங், காணொலியில் வழக்கு விசாரணை என்ற வசதி உள்ளது. இந்த வசதிகளை வக்கீல்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இன்னும் 2 ஆண்டுகளில் நீதித்துறையில் புரட்சி நடக்க உள்ளது. சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
காகிதம் இல்லாத முறையையும் கொண்டு வரப்பட உள்ளது. 4 கோடி வழக்குகளை எப்படி தீர்த்து வைப்பது என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டங்கள் மாறி வருகின்றன. அதனை வக்கீல்கள் தெரிந்திருக்க வேண்டும். நீதிபதிகளின் கடினமான கேள்விகளுக்கு வக்கீல்கள் கோபத்துடன் பதில் அளிக்க கூடாது. கோபம் இல்லாமல் பதில் அளித்தால் வெற்றிக்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''தமிழகம் நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையில், உயர்நீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பின் மூலம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நீதிமன்றங்கள் கட்டமைப்புகள் மிக சிறப்பாக இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழும். வக்கீல்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை சரியில்லாததால் அதனை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. நிதி நிலைமை சரியானதும் வக்கீல்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.