கட்டிய மணவாளன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் கட்டிய மாங்கல்யத்தை தூக்கி எறிந்தால் அது அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்திற்கு தீராத தோஷத்தை ஏற்படுத்துவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. தெரிந்தும், தெரியாமலும் செய்யும் இச்செயலானது அசுப பலன்களை கொடுக்கக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அதிபதியானவர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் இது போன்ற பாவ செயல்களை பெண்களுக்கு செய்ய தூண்டுவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது. ஜாதகத்தில் எட்டு, ஏழு, குடும்பஸ்தானம் ஆகிய இரண்டு ஆகிய இடங்கள் சரியாக அமையவில்லை என்றால், குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும். இதனால் திருமாங்கல்யம் ஆனது அவள் கழுத்தை விட்டு நீங்கும் என்பது ஜோதிட கணக்காக இருக்கிறது. இதற்கு இடம் கொடுக்காமல் பெண்கள் சற்று தங்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக இருப்பது ரொம்பவே நல்லது.
சிலருடைய ஜாதகத்தில் தோஷம் இருக்கும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய மாங்கல்யத்தை உண்டியலில் போடுமாறு பரிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும். இப்பரிகாரத்தை நிறைவேற்ற தவறியவர்களுக்கும், இது போல நடப்பது உண்டு. எனவே தோஷம் உள்ளவர்கள் திருமாங்கல்யத்தை முறைப்படி சேர்க்க வேண்டும். புதிய தாலியை கணவன் கையால் மனைவி ஆனவள் அணிந்து கொண்டு, பழைய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு வந்தால் இத்தகைய பிரச்சினைகள் நிகழாது தடுக்கலாம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் குறைய ஆரம்பிக்கும். எனவே தோஷமுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கோபம் என்பது மனிதனின் குணநலன்களில் மிகவும் மோசமானது. உங்களுடைய கோபத்தை நீங்கள் அடக்கி ஆள கற்றுக் கொண்டாலே, அமைதி உங்களை தேடி தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அதனை விடுத்து சரிக்கு சமமாக போட்டிக்கு போட்டியாக கணவனும், மனைவியும் இணைந்து சண்டை போடுவதால் குடும்பம் தான் உடையுமே தவிர, பிரச்சினைகள் தீர்வதில்லை.