இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 203 நாட்களில் இல்லாத அளவில் நேற்று 6 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 6,050 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,155 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 926, டெல்லியில் 733, அரியானாவில் 407, குஜராத்தில் 328, தமிழ்நாட்டில் 303, கர்நாடகாவில் 274, உத்தரபிரதேசத்தில் 232, ராஜஸ்தானில் 122, பஞ்சாப்பில் 159, இமாச்சலபிரதேசத்தில் 108 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 259 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,253 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 111 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி 31,194 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 2,891 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லியில் 2 பேர், சண்டிகர், சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்டில் தலா ஒருவர் என 9 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.