பிரதமர் மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித் துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்கும். அத்துடன் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்ப்பதுடன், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் 'உலகுக்காக தயாரிப்போம்' திட்டங்களுக்கு இது மிகப்பெரிய உதாரணமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கிடையே, மேற்படி மெகா பூங்காக்கள் ரூ.4,445 கோடி செலவில் அமைக்கப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்த பூங்காக்கள் மூலம் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்திருந்த அவர், ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியம், பண்டைய காலத்தில் இருந்து, இந்தியாவை உலகளாவிய முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றும் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது எனவும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இந்தியா, உலகளாவிய ஜவுளி மையமாக மாறுவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை இது. முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சர்வதேச வாங்குபவர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத வாய்ப்பாகும்' என வெளியிட்டு இருந்தார். இந்த பூங்காக்கள் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இணைந்துள்ள மேற்படி 7 மாநிலங்களின் மக்களுக்கு வாழ்த்துகளையும் பியூஸ் கோயல் தெரிவித்து இருந்தார்.