இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டசபை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.
பதவி ஏற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 20 மாத ஆட்சிக்கு மக்கள் அளித்து உள்ள அங்கீகாரம் ஆகும். கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி எனக்கு வெற்றியை தேடித் தந்து இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடந்து கொள்வேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைப்பேன். தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப்பெருந்தகை உள்ளார். அவர் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக தொடர்ந்து செயல்படுவார். எனக்கு அந்த பதவிக்கு ஆசை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.