புதிய சட்ட திருத்த மசோதா குறித்து கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய சட்ட திருத்த மசோதா மூலம், சுகாதாரத்துறையில் உள்ள டாக்டர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரிகளில் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. கொலை தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும். டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் இந்த புதிய சட்ட திருத்தத்தின் கீழ் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். சுகாதாரத்துறையினருக்கு எதிரான குற்றங்களுக்கு, சிறை தண்டனை மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. டாக்டர்கள், ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னரின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அங்கீகாரம் கிடைத்த பின், சட்டசபை கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.