திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். எம்.எல்.சி.களிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வருகின்றனர். அதனை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்து வருகின்றனர். வி.ஐ.பி. பிரேக் தரிசன சிபாரிசு கடிதம் தருபவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடிதம் கொடுப்பதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை எம்.எல்.சி. ஷேக் சப்ஜி என்பவர் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரது கார் டிரைவர் கைதானார். ஷேக்சப்ஜியின் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சிபாரிசு கடிதம் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீதும் தேவஸ்தான அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். நேற்று தீவிர கண்காணிப்பில் மூலம் 20 பேர் கொண்டு வந்த சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்பட்டது. வரும் நாட்களில் சிபாரிசு கடிதங்கள் முழுமையாக சரிபார்க்க திட்டமிட்டுள்ளனர். சில பிரதிநிதிகள் அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபாரிசு கடிதங்கள் மற்றும் அவர்களுடன் தரிசனத்திற்கு வருபவர்கள் மீது சிறப்பு கண்காணிப்பு நடத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.