இதையறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் நேற்று அந்த பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் 11 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே இல்லை என்பதை அறிந்தார். இதையடுத்து அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து பேசியதாவது:- தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
வேண்டுமானால் அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார். இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 11 குழந்தைகளையும் பென்னாலூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி சப்-இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.