உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. உள்நாட்டிலும் இந்திய முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் இந்தியா வெளிநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு நடந்துள்ளது. இது நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பிரதமர் மோடியின் உத்வேகமூட்டும் தலைமையின் கீழ், நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும் என நம்பிக்கையும் தெரிவித்து இருந்தார். இந்தியா கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.12,814 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்திருந்தது. வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கும், வெளிநாட்டு ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கும் எட்டுவதை இலக்காக அரசு நிர்ணயித்துள்ளது என பதிவிட்டுள்ளார். முந்தைய 2020-21-ம் ஆண்டில் ரூ.8,434 கோடி, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.9,115 கோடி அளவுக்கும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடந்துள்ளது.