கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியின் வருகையை எதிர்பார்த்து பா.ஜ.க. வேட்பாளர்களும், தொண்டர்களும் உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்திற்காக பெங்களூருவுக்கு வர இருப்பதாகவும், அவர் பிரமாண்ட ரோடுஷோ (தெருமுனை பிரசாரம்) நடத்த உள்ளார்.
இன்று காலை பெங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள நைஸ் ரோடு சந்திப்பில் இருந்து சுங்கதகட்டே வரை திறந்த காரில் ஊர்வலமாக சென்று மக்களிடம் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இன்று இரவு பெங்களூருவில் தங்கும் பிரதமர் மோடி, நாளை கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, மைசூரு மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். பிரதமர் மோடியின் பிரசாரத்தால் கூடுதலாக 2 முதல் 5 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.