ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு அனைத்தும் கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். எனவே இதை ஒரு வெற்றியாக அவர்கள் கருத முடியாது. ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று போட்டார்கள். இப்போது அதை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் என்று கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளை ஏறி கால்கள் தளர்ந்துவிட்டன. அதனால்தான் மக்கள் மன்றத்தை நோக்கி ஏப்ரல் 24-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது. தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. இறுதி வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும். 2024-க்குள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவேன் என்று சசிகலா நம்புகிறார். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.