இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி சீன தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு விந்தணு தானம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா மற்றொரு முயற்சியில் இறங்கியது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்தத் திட்டம். அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி, பேன் மெய் கல்வி குழுமத்தின் மியான்யாங் பிளையிங் கல்லூரியானது, முதன்முறையாக கடந்த மார்ச் 21-ம் தேதி இந்த விடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாணவ, மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்துக் காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.