சென்னையில் உள்ள மிகப்பழமையான பூங்காக்களில் செனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க. பூங்காவும் ஒன்றாகும். இப்பூங்கா 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மெட்ரோ ரெயில் பணிக்காக இப்பூங்கா 2011-ம் ஆண்டில் மூடப்பட்டது. இப்பூங்காவில் பழமையான 328 மரங்கள் இருந்தன. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் மெட்ரோ பணிக்காக வெட்டப்பட்டது. இதற்கிடையே, புதுப்பொலிவுடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் இந்த பூங்காவை மேம்படுத்தியது. இப்பணிகள் 2018- ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை செனாய் நகரில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.18 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இன்று மாலை முதல் பூங்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பூங்காவில் படிப்பகம், சறுக்கு பயிற்சி, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு, மட்டைப்பந்து பயிற்சிக்கூடம், நடைபயிற்சி பாதை, பல வண்ண இசை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், யோகா மற்றும் தியானப் பயிற்சி கூடம், ஆண், பெண்களுக்கு தனித்தனியாகக் கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.