கொரோனா காரணமாக 2021-22-ல் 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்பது கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பொதுத்தேர்வு இந்த ஆண்டு 6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தான் எழுதி இருப்பார்கள். தற்போது 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுத வேண்டும் என்பதற்காக தான் இந்த பணிகளை மேற்கொண்டோம். தற்போது பிளஸ்-2, பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வழக்கமாக 4.5, 4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள். இந்த ஆண்டு 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வந்துள்ளது. உடனடியாக இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடன் சேர்த்து தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து சிறப்பு பயிற்சி அளித்து வரும் ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைப்போம். அதன் பிறகு தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறையும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம். தாலிக்கு தங்கம் திட்டத்தை முற்றிலும் நிறுத்தி விட்டோம் என கூறுவது தவறு. அந்த திட்டத்தை மாற்றி உள்ளோம். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்தவர்கள் தாலிக்கு தங்கம் திட்டத்தை முறையின்றி செயல்படுத்தி வந்தனர். தற்போது அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை விட மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அதிகமான மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களது உயர் கல்வியை தடையின்றி படிப்பதற்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.