No results found

    சிசுக்கொலைக்கு பெயர்போன ஹரியானா இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடுகிறது- கட்டார்


    ஹரியானா மாநிலம் கர்னாலில் மாநில அளவிலான 'சம்மான் சமரோ' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, பாடல், மருத்துவம், சமூக நலம், விளையாட்டு, விமானப் போக்குவரத்து மற்றும் மலையேற்றம் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்களை கவுரவித்தார். சில பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது, இந்திரா காந்தி மகிளா சக்தி விருது மற்றும் கல்பனா சாவ்லா சௌர்ய புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும், பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக ஃபதேஹாபாத், அம்பாலா மற்றும் ஜிந்த் ஆகிய மாவட்ட துணை ஆணையர்களுக்கும் அவர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார், ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைக்கு பெயர் போன ஹரியானா, இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடி வருவதாகவும், இன்று மாநிலத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- ஹரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்த மாநில அரசு, சமூக அமைப்புகள், காப் பஞ்சாயத்துகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறைகள் அயராத முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும், பெண் சிசுக்கொலையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இந்த அர்ப்பணிப்பு முயற்சியால்தான் இன்று ஹரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண்கள் உள்ளனர். 2014ல், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 871 பெண்கள் இருந்தனர். ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைக்கு பெயர் போன ஹரியானா, இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடுகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பானிபட்டில் தொடங்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' பிரச்சாரத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது. 2014ல் 6 சதவீதமாக இருந்த காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்று 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பதாக கூறுவார்கள். எனது வெற்றியில் என் அம்மாவின் பங்கு பெரியது. நான் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்று மேற் கல்வி படிக்க விரும்பியபோது அதை எனது தந்தை ஆதரிக்கவில்லை. ஆனால் என் தாய் தனது கல்லூரி சேர்க்கைக்கு ரூ.300 கொடுத்தார். எனது வெற்றியை எனது தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எனக்கு மேற்படிப்புக்கான பணத்தை வழங்கவில்லை என்றால் நான் இந்த நிலையை எட்டாமல் இருந்திருக்கலாம். சர்வதேச மகளிர் தினத்தை 'மகிளா சம்மன் திவாஸ்' ஆக கொண்டாட வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال