No results found

    விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பான முறையில் வழி நடத்தப்படுகிறது. அதற்கு ஆதரவு கொடுக்கும் எண்ணம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது. கட்சி கேடுகெட்டு போனாலும் அவருக்கு அதைப்பற்றி கவலை இல்லை. அவரை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரக்கூடாது என்பதுதான். கழகத்துக்கு விரோதமான செயல்களை செய்து அ.தி.மு.க. அலுவலகத்தை சூறையாடினார். இதை தமிழக மக்கள் மறக்கவில்லை.

    அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் சர்வ கட்சி தலைவர். அவர் போய் சேர்ந்த எந்த கட்சியும் உருப்பட்டது இல்லை. அவரது ராசி அப்படித்தான். அவர் எடப்பாடி பழனிசாமியையும் தலைமை கழக நிர்வாகிகளையும் மோசமாக விமர்சித்து உள்ளார். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு சகுனி. அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் நடந்தபோது கட்சி ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். அதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி சமுத்திரம் போல இருக்கிறார். அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஆதரவாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கூவம் போல இருக்கிறார். கூவமும், சமுத்திரமும் ஒன்றாகி விடுமா? நிர்வாகிகள், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் அ.தி.மு.க.வி.ன் பெயரை சொல்லக்கூட தகுதி இல்லாதவர்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவசரப்படவில்லை. தலை இல்லாமல் எத்தனை நாள் கட்சி நடத்த முடியும்? என்று பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இது உரிய நேரம்தான். இது கட்சியின் முடிவு. அதன் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்படி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்தார். பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் பொருத்தமாக இருப்பார். அவர் தனது கவுரவத்துக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வின் அதிகார பலம், பணபலம் இருந்தது. ஆனால் நாங்கள் தொண்டர்கள் பலத்தை மட்டுமே நம்பி போட்டியிட்டோம். 44 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி இருக்கிறோம். இதுவே எங்களுக்கு வெற்றிதான். எங்களின் வாக்குவங்கி அப்படியே தான் உள்ளது. இடைத்தேர்தலை வைத்து பொதுத்தேர்தலை கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال