இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது- ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி வனச்சரக பகுதிகள் முழுமையாகவும், அந்தியூர் வனப்பகுதியையொட்டியுள்ள கோபிசெட்டி பாளையம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளை இணைத்தும் இந்த புதிய சரணாலயம் அமைக்கப்படுகிறது. இந்த சரணாலயத்தில் எந்த பகுதிகள் இருக்கும் என்பது இப்போது தெரியாது. ஆனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி வட்டங்களில் சிறிதளவு கூட இந்த காப்பகத்தில் இடம் பெறாது. எந்தெந்த பகுதிகளை இணைப்பது என்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின்பு வனப்பகுதி அல்லாத பிற பகுதிகளை சரணாலயத்துடன் இணைக்க வேண்டியிருப்பின் அங்கு குடியிருக்கும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.
மேற்குதொடர்ச்சி மலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து அந்தியூர் வனப்பகுதி வழியாக புலிகள் சத்தியமங்கலம் காப்பக பகுதிக்கு இடம் பெயர்வது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது போன்று 9 புலிகள் அந்தியூர் வனப்பகுதியில் நடமாடியிருப்பது வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. புலிகள் நடமாட்டத்தில் இடையூறுகளை தவிர்க்க இந்த புதிய வனவிலங்கு சரணாலயம் அமையும். அதோடு இல்லாமல் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், மற்றும் மான்கள் உள்ளிட்டவை அதிகம் வசிக்கிறது. இது தவிர இந்த புதிய சரணாலயத்தில் 21 வகையான பாலூட்டிகள், 136 வகையான பறவைகள்மற்றும் 118 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. இந்த வன சரணாலயத்தின் பெரும்பாலான பகுதிகள் பர்கூர் மலையின் கீழ் வருவதால் யானைகள் பாதுகாப்புக்கு இது பெரும் உதவியாக இருக்கும். மேலும் மனித-விலங்கு மோதல் தடுக்க வாய்ப்பாக அமையும். மேலும் இந்த வனவிலங்கு சரணாலயம் அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி ஆகிய காப்புக்காடு பகுதிகளில் மட்டுமே அமையும்.எனவே அங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது. சரணாலயம் தொடர்பாக அனைவரிடமும் கலந்து ஆலோசனை நடத்தி பின்னர்திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.