பொதுவாக வந்தே பாரத் ரெயிலில் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். 2 பக்கமும் ரெயிலை இயக்கக்கூடிய வசதி அதில் உள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரெயில் இருக்கைகள் விசாலமாக சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை-கோவை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலில் 16 பெட்டிக்கு பதிலாக 8 பெட்டிகள் மட்டுமே இயக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6 மணிக்கு புறப்படக்கூடிய சதாப்தி எக்ஸ்பிரஸ்சுக்கு இணையாக வந்தேபாரத் ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து காலையில் 6 மணிக்கு புறப்படும் அந்த ரெயில் பகலில் சென்ட்ரல் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடைகிறது.
வந்தே பாரத் ரெயில் கால அட்டவணை, கட்டண விவரம் போன்றவை இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் சென்ட்ரலில் இருந்து கோவைக்கு புறப்படும் சதாப்திக்கு இணையாக சென்ட்ரலுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. சேலம், திருப்பூரில் மட்டுமே நின்று செல்ல உள்ள வந்தே பாரத் ரெயிலில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்காது என்பதால் 16 பெட்டிகள் இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி 8 பெட்டிகளை கொண்டு இயக்க ஆலோசிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் மற்ற ரெயில்களைவிட வேகமாக செல்வதால் பயண நேரம் 6 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.