இந்த நிலையில் நேற்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லை என்றும், அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. கூறியபடி தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வர்களுடைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. அந்தவகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தேர்வு எழுதிய பலர் ஏற்கனவே பலமுறை குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் என்பதால், அவர்கள் எளிதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற வகையில், டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தகவலும் தேர்வர்களால் ஏற்றுக்கொள்வதாக இல்லாமல் போனது.
இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 1,089 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. அதாவது தேர்வு எழுதியவர்களில், காரைக்குடி தேர்வு மையத்தில் மட்டும் எழுதிய சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல் கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது விஸ்வரூபம் ஆன நிலையில், தற்போது அரங்கேறி இருப்பதாக கூறப்படும் இந்த முறைகேடும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுவும் இந்த முறைகேடு கருவூல அலுவலர்களின் உதவியுடன் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பரவலாக எழுந்து வருகிறது.
இவ்வாறாக குரூப்-4 தேர்வு முடிவு வெளியானது முதல் தொடர்ந்து குளறுபடி, நில அளவையர், வரைவாளர் தேர்வு முடிவுகள் முறைகேடு என சர்ச்சை புகார்கள் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சட்டசபையிலும் நேற்று எதிரொலித்திருக்கிறது. எனவே டி.என்.பி.எஸ்.சி. இந்த குரூப்-4 தேர்வு முடிவு குளறுபடி விவகாரம் மற்றும் நில அளவையர், வரைவாளர் பணியிடங்களில் வெளியாகிவரும் முறைகேடு குறித்த தகவல்களுக்கும் உரிய விளக்கத்தை வெளியிட்டு, குளறுபடி, முறைகேடு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தேர்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பலத்த குரலாக ஒலித்து வருகிறது.