இதனை தொடர்ந்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:- மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். நான் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எனது மாநில கவர்னர் என்னை அவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்காக நான் சென்னை வந்தேன். இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்படவில்லை. ஆனால், ஸ்டாலினை சந்திக்காமல் சென்னையில் இருந்து நான் எவ்வாறு செல்வது? ஆகையால், மு.க.ஸ்டாலினை சந்திப்பது எனது கடமையாக நான் கருதுகிறேன். அவருடன் ஒரு கோப்பை தேநீர் குடிப்பது எனது கடமை.. சென்னையில் மிகவும் பிரபலமானது என்ன? தேநீர் குடிப்பது...
இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது, அரசியல் அல்லாத மக்களின் நலன் சார்ந்த, வளர்ச்சி மற்றும் பிற விஷயங்கள் குறித்து பேசினோம். அரசியல் குறித்து பேசவில்லை. அரசியலை விட வளர்ச்சி மிகப்பெரியது என்று நான் நினைக்கிறேன். நான் எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தும் கருத்து தெரிவிக்கமாட்டேன். கவர்னர் விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு தனிப்பட்ட மற்றும் மரியாதை நிமித்தமான, சகோதர - சகோதரி முறையிலான சந்திப்பு. இது அரசியல் ரீதியிலான? சமூக ரீதியிலான? கலாச்சார ரீதியிலான? சந்திப்பா என நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்... இது அனைத்தையும் சார்ந்த சந்திப்பு. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.