இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். சார்லஸ் மன்னர் செப்டம்பரில் அரியணை ஏறினார். இதற்கிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது. இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இதன்படி, மே 6-ம் தேதி முடிசூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, சிறப்பிக்கும் வகையிலும், அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையிலும் நாடு முழுவதும் வங்கி விடுமுறை அமலில் இருக்கும்.