இதற்கிடையே, அமெரிக்கா சென்றுள்ள இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில்தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என தெரிவித்தார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.