சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, உலக பொருளாதார நிலவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்டது. அதில் நடப்பு நிதிஆண்டில் (2022-2023), இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கணிப்பில், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வாஷிங்டனில் புரூக்கிங்ஸ் நிறுவனத்துடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று கால பின்னடைவில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது என்றும், இந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடினமாக இருக்கலாம் என்றும் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதாகும், அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் அடுத்த பட்ஜெட்டிலும் தொடரும்: மத்திய நிதி மந்திரி தகவல் | Google Tamil News
Tamil News