சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் முறையை சென்னை மாநகர போலீசார் நள்ளிரவு முதல் அமல்படுத்தி உள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 185-வது பிரிவின் கீழ் வழக்கு போடப்படுகிறது. அதே நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் மோட்டார் வாகன சட்டம் 188-ன் கீழ் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறும்போது, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை மேலும் கட்டுப்படுத்தும் எண்ணத்திலேயே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். சென்னை போலீசாரின் இந்த நடவடிக்கையால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கும் இனி அபராதம்- சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை | Google Tamil News
Tamil News