No results found

    சங்கீதங்கள்

    சங்கீதம் 1

    1 தீயோரின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறு பெற்றோன்.

    2 கடவுளுடைய திருச்சட்டத்தில் இன்பம் காண்பவனாய், அதை அல்லும் பகலும் தியானிப்பவனே பேறு பெற்றோன்.

    3 வாய்க்கால்களின் ஓரத்தில் நடப்பட்டு, இலைகள் என்றும் உதிர்க்காமல் தக்க பருவத்தில் கனி தரும் மரத்துக்கு அவன் ஒப்பாவான்: அவன் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவான்.

    4 தீயவருக்கு அங்ஙனமிராது, ஒரு நாளுமிராது: காற்றோடு காற்றாய்ப் பறக்கும் பதர் போன்றவர்கள் அவர்கள்.

    5 நீதித்தீர்ப்பு வரும் போது தீயோர் நிலை குலைந்துபோவர்: நல்லவர்கள் சபையில் பாவிகள் நிலைத்திரார்.

    6 நல்லோரின் வழியைக் கடவுள் பாதுகாப்பார்: தீயோரின் வழியோ அழிவுக்கே செல்லும்.

    Previous Next

    نموذج الاتصال