No results found

    படிக்கும் போதே தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்- மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

    நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டுத் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்ட இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு நான் முதல்வன் பேட்ஜ்களை அவர் அணிவித்தார்.

    நிகழ்ச்சியல் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டு இளைஞர்களைக் கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க வைக்க தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். நான் மட்டும் முதல்வன் அல்ல, அனைவரும், ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்தத் திட்டம். இது என்னுடைய கனவுத் திட்டம்.

    அந்தத் திட்டம், என் கண்ணுக்கு முன்னால் மாபெரும் வளர்ச்சியை அடைந்து வருவதை மகிழ்ச்சியுடன் பார்த்து, மன நிறைவடையும் உள்ளத்தோடு தான் நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். அனைத்துத் துறையின் வளர்ச்சி, அனைத்து வகை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி , அனைத்து சமூக வளர்ச்சி, என்ற திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இது இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஆட்சியாக நடந்து வருகிறது. இன்றைக்கு போட்டி போட்டுக் கொண்டு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கும், புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இது தொழில்வளம் இல்லை என்ற நிலைமையையும், வேலை கிடைக்கவில்லை என்ற நிலைமையையும் மாற்றுவதாக அமைந்துள்ளது. இப்படி உருவாகும் தொழில்களின் திறனுக்கேற்ற வல்லுநர்களை உருவாக்க வேண்டிய கடமை நம்முடைய அரசுக்கு இருக்கிறது. அதனை மனதில் வைத்துத்தான் இந்தத் திட்டம், நான் முதல்வன் என்கிற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. நமது இளைஞர்களை, தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைக்கேற்ற திறன் படைத்தவர்களாக உருவாக்குதல் - அதன் மூலம், அவர்களின் திறனுக்கேற்ற தகுதியான வேலை கிடைக்கச் செய்தல், இந்த அரசின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே, இளைஞர்களை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் நான் முதல்வன் என்கிற திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பன்னிரண்டாம் வகுப்பு படித்த பெரும்பாலானவர்கள் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கக்கூடிய பிற துறைப் படிப்புகளையும் அவர்கள் உணர்ந்திருந்தால் இதுமாதிரி நிச்சயமாக நடக்காது. பல்வேறு துறைசார் படிப்புகளைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது பெற்றோர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள், தங்களது ஆசைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம். வழிகாட்டலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் திணிக்கக் கூடாது. அப்பா, அம்மாவின் ஆசைக்காக மட்டும் சேரும் பிள்ளைகள் - பின்னர், மனதளவில் சோர்வடைகிறார்கள். அவர்களால், முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தங்களது பிள்ளைகளுக்கு, எந்த மாதிரியான படிப்பில் ஆர்வம் இருக்கிறது என்று கேட்டு, அதில் படிக்க வையுங்கள். பல்வேறு படிப்புகளைக் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காகத்தான், கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சியை நம்முடைய அரசு தொடங்கி இருக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற பெயரில், 25.06.2022 அன்று, தமிழக அரசு ஒரு விழாவை சிறப்பாக நடத்தியது. நான் அடிக்கடி பேசுவது, நம் தமிழ்நாட்டு மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள், அவர்கள், வேறு எந்த மாநில மாணவியருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அதைபோல்தான் இப்போதும் சொல்கிறேன், உறுதியாகக் கூறுகிறேன். நம் இளைஞர்கள், திறமையில் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், இவர்களுக்குத் தேவை, சிறந்த வழிகாட்டி மற்றும் உந்து சக்தி ஆகியவைதான். இவற்றை வழங்கினால், இவர்களின் திறமை இன்னும் பளிச்சிடும். அதன் மூலம், வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பதை நன்கு நான் உணர்ந்த காரணத்தினால் "நான் முதல்வன்" திட்டத்தை நான் தொடங்கினேன். இன்று அறிமுகப்படுத்தியிருக்கக்கூடிய, நான் முதல்வன் இணையதளம் இந்த நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது. இந்த இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தும்போது, தெளிவான, சீரான தகவல்களை நிச்சயமாகப் பெற முடியும். இந்த இணையதளத்தில் இருக்கக்கூடிய திறனறி தேர்வு (Psycho-metric Test) மூலம் மாணவர்களின் உளவியல் பண்புகளை ஆராய்ந்து அவர்களின் தனித்திறனை அறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை பரிந்துரைக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தின் வாயிலாக, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அந்தப் பாடப்பிரிவுகளை கூடுதலாகப் பயின்றால், நவீன தொழில் நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பினைப் பெற முடியும் என்ற தெளிவான முடிவுக்கு வருவர். இந்த இணையதளம் மூலம் தாங்கள் பயில விரும்பும் பாடப்பிரிவுகைளை தேர்வுசெய்து பயிற்சி பெறக் கூடுதலாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் (Artificial Intelligence) இணையப் பாதுகாப்புத் தொழில்நுட்பம் (Cyber Security)போன்ற நவீன கூடுதல் பிரிவுகளை இலவசமாகவும், மிகக் குறைவான கட்டணத்திலும் பயிலும் வகையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. புதிய புதிய படிப்புகள் ஏராளமாக வந்துவிட்டது. அதனைக் கற்க முன்வர வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். புதிய புதிய தொழில்கள் உருவாகி வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு என்னமாதிரியான வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்பதை அறிந்து அவற்றைப் படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும்போதே, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இணையத் தளங்களிலேயே, நிறைய பட்டயப் படிப்புகள் வந்துவிட்டன. அவற்றை இடைப்பட்ட காலத்திலேயே கற்றுக் கொள்ளலாம். இத்தகைய வாய்ப்பை, மாணவர்கள் பயன்படுத்தும்போது கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறும்போது, வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கும். தற்போதைய நிலைப்படி, மாணவர்கள் தங்களது கல்லூரிப் படிப்பினை முடித்துவிட்டு, கூடுதல் ஆண்டுகள் செலவிட்டால்தான், வேலைவாய்ப்பு பெறுவதற்கான கூடுதல் பாடப்பிரிவுகளைப் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, இத்தகைய நவீன பாடப்பிரிவுகளை கல்லூரிப் படிப்பின்போதே வழங்கிட இந்த அரசு முனைப்பைக் காட்டி வருகிறது. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் குறுகியகாலத் திறன்பயிற்சிகளையும் நான் முதல்வன் இணைய தளம் வழங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய பாடப்பிரிவுகள் குறித்து தகுந்த வழிகாட்டுதலை வழங்கும் வகையில் நான் முதல்வன் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மென்மேலும் அவ்வப்போது புதிய, கூடுதல் விவரங்களை வழங்குவதற்காக, தொடர்ந்து மேம்படுத்தப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் நம்முடைய இளைஞர்களுக்கு மொழித் திறன் இருக்க வேண்டும். இந்த இரண்டு மொழிகளிலும் எழுத, படிக்க, பேச மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல மொழி ஆற்றல் இருந்தால்தான் நம் வளர்ச்சியை அது வானளவுக்கு உயர்த்தும். கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவரும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது ஆங்கிலப் பேச்சாற்றல். வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போதும் சரி, வேலை கிடைத்த பின்னரும் சரி, இன்றைய பணிச்சூழலில் ஆங்கிலப் பேச்சாற்றல் என்பது தவிர்க்கமுடியாத தேவையாக இருக்கிறது. இந்த ஆங்கிலத்திறன் குறைவாக இருக்கும்போது சிலருக்கு, ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணமாக, ஆங்கிலப் பேச்சாற்றல் குறைவாக இருக்கும்போது, அவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும்போது, அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டு விடுகின்றனர். எனவே, இன்றைய சூழலில் மாணவர்களின் தேவை அறிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் பருவத்திலேயே ஆங்கிலப் பேச்சாற்றல் என்ற பாடத்திட்டம் திறன்மிகு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் உதவியுடன், அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்து மாணவர்களுக்கும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும். ஆங்கிலம் மட்டுமன்றி, ஜெர்மன், ஜப்பானிய மற்றும் பிரெஞ்ச் மொழித் திறன்பயிற்சிகளும் வழங்கப்படும். இதன் மூலம், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை கற்பதில் இருக்கக்கூடிய சிரமங்கள் குறையும் என்பதோடு கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும்போது, எங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் நாளேடுகளை, புத்தகங்களை தொடர்ந்து வாசியுங்கள். இதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனைகளை எழுதிப் பாருங்கள். கருத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் என்பது மிகமிக முக்கியமான திறமை! நம்மை நாமே அறிந்துகொள்ள, எடைபோட இது ஒரு சிறந்த வழிமுறை! போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாவது குறித்த பயிற்சிகளும் நான் முதல்வன் இணையதளத்தில் வழங்கப் படுகின்றன. தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் ஆளுமைத்திறன் மற்றும் தொழில் முனைவை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல பிரத்தியேகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் இதற்காக நாம் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். உலகத் தரத்திலான பயிற்சிகளை உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெற உதவும் சான்றிதழ்களை, கல்லூரியில் பயிலும் காலத்திலேயே பெறும் வாய்ப்பை இந்த இணையதளம் உறுதி செய்கிறது. தமிழ்நாடு என்பது, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருப்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதேபோல், உலகின் தலைசிறந்த திறமைசாலிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் பட்டியல் வெளிவர வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு சிறந்த நிறுவனங்களில் மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களிலும் முக்கியப் பொறுப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அமர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அனைவர்க்கும் வேலை என்பது மட்டும் நமது இலக்கல்ல, அனைவர்க்கும் தகுதியான வேலை என்பதே நம்முடைய இலக்கு.அந்த இலக்கை அடைவதற்கான முழுத் திறமையும் தமிழக இளைஞர்களுக்கு உண்டு, உங்கள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது, நீங்களும் அந்த தன்னம்பிக்கையோடு உலகை எதிர்கொள்ளுங்கள். தமிழ்நாட்டு இளைய சக்தியை இணையற்ற சக்தியாக மாற்ற எந்நாளும் உழைப்போம். அந்த இலக்கை அடைவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் திறன் பயிற்சி தொடர்பாக பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி,சேகர்பாபு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Previous Next

    نموذج الاتصال